Thursday, December 1, 2016

பணமில்லா வர்த்தகம் - சாத்தியமா? - ஒரு நடைப்பாதை வியாபாரியின் விளக்கம்.

நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியா ஒரு பணமில்லா வர்த்தக நாடாக வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார். 90% சதவித சில்லறை வர்த்தகம் நடைபெறும் ஒரு நாட்டில், அதுவும் மொத்த மக்கள் தொகையில் 50% மேல் சில்லறை வர்த்தகத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தட்டும் ஒரு நாட்டில் இது சாத்தியமா? என்று ஒரு கேள்வி எல்லோரையும் போல என் மனத்தில் எழுந்தது.

எனக்கு தெரிந்த ஒருவர் கடைத்தெருவில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளார். அவர் நன்றாக படித்திருக்க வேண்டியவர். +2வில் 1000 மார்க்குக்கு mமேல் எடுத்திருந்தாலும், தன குடும்ப சுமையை சுமக்க, அதன் பின் திருப்பூரில் வேலைக்கு சென்று, தொலைத்தூரக் கல்வியில் B.Com பட்டம் பெற்று, தி சொந்த ஊருக்கு திரும்பி, இப்போது நடைப்பாதை கடையில் பழங்கள் விற்றுக்கொண்டிருக்கிறார். அவரைக் கேட்டபோது, சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் முடியவே முடியாது சார்" என்றார். எப்படி என்று அவர் விளக்க விளக்க, நான் அதிர்ந்துப் போனேன்.

சார். இப்போது நான் தினமும் ரூபாய் 5000 முதலீடு செய்து, பழம் வாங்கி வந்து ரூபாய் 6000/-க்கு விற்கிறேன். தினமும் 1000 ரூபாய் லாபம். இதில், நகராட்சி வரி, போலீஸ் லஞ்சம், அழுகிப் போகும் பழங்கள், என் சாப்பாடு செலவு, தள்ளு வண்டி வாடகை, பழங்கள் எடுத்து வர ஆட்டோ வாடகை என தினமும் 500 ரூபாய்கள் செலவு. மிச்சம் 500 ரூபாய்கள் எனக்கு இறுதி லாபம். இதையே நான் பணமில்லா வர்த்தகத்தில் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய லாபம் அப்படியே பாதியாக குறையும். எப்படி என்று விளக்குகிறேன். இது ஒரு வருடத்திற்கு . . .

                                                                                       பணமில்லா வர்த்தகம் 
POS Machine வாடகை மாதம் 850 * 12                                             10,200.00

ஒரு நாளைக்கு 6000/- ரூபாய்க்கு 0.75% POS
Transaction charge 45/- 365 நாளைக்கு 45*365                                    16,425.00

அடுத்த நாள் வீட்டு செலவிற்கு ATMஇல் பணம்
எடுக்க வேண்டும் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல்
எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23/-சர்வீஸ் சார்ஜ்
மாதத்திற்கு 10 முறை மட்டுமே எடுத்தால் 230*12                     276.00

SMS Charges 30/- x 4 Quarter                                                                        120.00

Bank Book keeping / folio charges, etc                                                           200.00
                                                                                                                    --------------
Total Bank Charges                                                                                      27,221.00
                                                                                                                    --------------
 இதை தவிர, POS மெஷினில் ஸ்வைப் செய்யப்படும் பணம் உடனே என் அக்கௌன்ட்டிற்கு வராது. அடுத்த நாள் தான் வரும். எனவே என்னுடைய அடுத்த நாளுடைய முதலீடு 5000/- ரூபாய்க்கு நான் வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய முதலீடு இரு மடங்காகிறது. (ரூபாய் 10,000/-).

இதை விடப் பெரிய காமெடி இருக்கிறது. ஒரு நாளைக்கு 6000/- வியாபாரம் செய்கிறேன் என்றால், ஒரு வருடத்திற்கு 6000*365 = 21,90,000/-. பத்து லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்தால் TIN வேண்டும். மாதாமாதம் நான் வரி செலுத்த வேண்டும் அல்லது 0% வரியுள்ள பொருளாயிருந்தாலும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நான் ஒரு கணினி வாங்க முடியாது. மாதத்திற்கு 100/- ரூபாய்க்கு ஒரு ஆடிட்டரை வைத்து கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன் செலவு வருடத்திற்கு 1200/-. வருடத்திற்கு இருபது லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்வதால், Income Tax தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு வருடத்திற்கு ஆடிட்டருக்கு ரூபாய் 500/-.TIN & PAN வாங்க முதலீடு 1000/-.

இவ்வளவிற்கும் என் லாபம் என்பது ஒரு வருடத்திற்கு 500 * 365 = 1,82,500/-. வாயை பிளக்காதீர்கள். இது நான்கு பேர் கொண்ட என் மொத்த குடும்பத்திற்கும் ஒட்டு மொத்த வருமானம். வருமான வரிக்கு கீழே வராத என் வருமானத்தில் இருந்து கிட்டத்தட்ட 29000/- வங்கியும், அரசும் எடுத்துக் கொள்கிறது. கிட்டத்தட்ட 16%.இந்த நஷ்டத்தை நான் யாரிடம் வசூல் செய்ய முடியும். நுகர்வோரிடம் இருந்து தானே. அப்புறம் எப்படி விலைவாசி குறையும். ஏறத்தான் செய்யும். இதனால், நுகர்வோருக்கும் பாதிப்பு தான்.

இதை விட முக்கியம். இந்த பாதிப்புகள் என் வரை மட்டுமல்ல. நான் பழங்களை வாங்கும் வினியோகிஸ்தருக்கும் இதே கதை தான். அவரும் neft transfer charges, நான் பொருளை வாங்கும்போது POS charges என 16% லாபத்தில் நஷ்டம். எனவே அவரும் அவர் விலையை ஏற்றுவார். அப்போது மேலும் 16% அல்லது 20% ஏற்றலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், விலை 150% ஏறும். வங்கிகள் லாபம் கொழிக்கும். ஆளே தேவை இல்லை. சில கணினிகளும், ஒரு சில வேலையாட்களும் வைத்துக் கொண்டு, வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும். 

அவர் சொன்னது அனைத்தும் சரியே. ஒரு சில பண எண்ணிக்கை வேண்டுமானால் கூடலாம். குறையலாம். மற்றபடி அனைத்தும் சரியே. பணமில்லா வர்த்தகம் இவ்வளவு பாதிப்புகளை, ஒரு நடைப்பாதை வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் ஏற்ப்படுத்துமெனில் இது சாத்தியமே ஆனாலும், நம் நாட்டிற்கு தேவையா? குறைந்தப் பட்சம் சிறு வணிகத்திற்க்கேனும் இதிலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் தனி மனிதனின் வாங்கும் திறனை அதிகரிக்க, அவனின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மீண்டும் ஒரு பண மதிப்பை குறைக்கும் வழியைத் தான் தேடும்.

கறுப்புப் பண பெருச்சாளியின் வாலை பிடிக்கப் போய், புலியின் வாலை பிடிக்கப் போகிறோமோ? என்ற அச்சம் எழாமலில்லை.

Monday, August 15, 2016

கீழடி - 2300 வருடங்களுக்கு முன் - ஒரு காலப் பயணம்.

கீழடி - சங்கக்காலத்தின் வாயில்.


கீழடி. மதுரைக்கு 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம். என் அடிக்கு (காலடி) கீழே உன் பண்டைய நாகரீகம் இருக்கிறது என்பதாலோ என்னவோ, இந்த பெயர் அந்தக் கிராமத்துக்கு வந்துள்ளது.

வரலாற்றை கண்டுபிடித்த வரலாறு.


2013-2014 இல் சங்கக் கால ஊர்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன். வைகை ஆற்றின் கரையோரம் இரு கரைகளிலும், வைகை ஆரம்பிக்கும் வெள்ளி மலையில் இருந்து முடியும் ஆற்றங்கரை வரையில் நான்கு மாவட்டங்களில் (திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி) 293 இடங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 170 இடங்களில் புதிதாக தொல்லியல் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இரும்புக் காலம் முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சேர்ந்தவையாக இருந்தன. எவ்வளவு கிடைத்தாலும் மக்கள் வாழ்ந்த நகரம் மட்டும் கிடைக்கவே இல்லை. சிறு சிறு கிராமங்கள், மூன்று நான்கு கிராமங்களுக்கு சேர்த்து ஒரு சுடுகாடு என்ற அளவில் மட்டுமே கிடைத்தது. 

சுதந்திரத்துக்கு முன் அகழ்வாராய்ச்சி நடந்த பின், பெரிய அளவில் வைகை ஆற்றின் கரையில் மத்திய அரசோ, தமிழக அரசோ ஆராய்ச்சி எதுவும் நடத்தவில்லை. 1950களில் இந்திய தொல்லியல் துறையை சேர்ந்த திரு. K.V.Raman அவர்கள் தலைமையில், பெரிய குளம், மேலூர், திருமங்கலம் தாலுக்காக்களில் கிராமம் கிராமமாக சர்வே எடுத்து, நிறைய இடங்களை தொல்லியல் இடங்களாக கண்டுப்பிடித்தனர்.

1980களில் தமிழக தொல்லியல் துறை வைகை ஆறு முன்பு கடலுடன் கலந்த இடமும், சங்கக் கால துறைமுகமுமான அழகன்குளம் ஊரில் ஆறு காலக்கட்டங்களில் செய்தது தான் வைகை ஆற்று படுக்கையில் செய்த பெரிய அகழ்வாராய்ச்சி. 2006ஆம் வருடம், மதுரை அருகே உள்ள கோவலன்பொட்டலில், தமிழக தொல்லியல் துறை சில இடங்களைக் கண்டறிந்தது. இருந்தும்,மிகப்பெரிய அளவில் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனவே, வைகை ஆற்றின் கரையோரம், மீண்டும் பெருமளவில் ஆராய்ச்சி செய்திட வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வைகை ஆற்றின் இரு கரைகளிலும் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தெரிவு செய்யப்பட்ட 293 இடங்களில் இருந்தும் பானைகள், முதுமக்கள் தாழிகள், செம்பு, வெள்ளி காசுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் கிடைத்தாலும், பெரியதாக எதுவும் கிடைக்கவில்லை.

ஆராய்ச்சியின் இறுதிக்கட்டமாக மதுரை நகரை சுற்றி உள்ள இடங்களில் ஆராய்ந்த போது, குகைகளில் வரையப்பட்ட கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள், கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்தன. மதுரை நகரம் முழுவதும் வளர்ந்துவிட்டிருந்தபடியால் நகருக்குள் எதுவுமே கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

கிட்டத்தட்ட ஆராய்ச்சியை முடிக்கும் தருவாயில், இவர்கள் கீழடி வந்த போது, ஒரு லாரி ஓட்டுனரிடம் இவர்கள் பேசியபோது அவர் அருகிலிருந்த ஒரு தென்னந்தோப்பை காண்பித்து, அங்கே போய் பாருங்கள், வெறும் பானை ஓடுகளாக இருக்கிறது. சில இடங்களில் பெரிய பானைகளும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். இவர்களும் அசுவாரசியமாக அங்கு சென்று பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் உடைந்த பானை ஓடுகள், சிலவற்றில் ஓவியங்களுடன், பெரிய பெரிய சுட்ட செங்கற்கள் (பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் மிகப்பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டவை) இருந்தன. உடனே ஒரு JCBயை அழைத்து வந்து இரண்டு தென்னை மரங்களுக்கு இடையேயான இடத்தில் மெதுவாக தோண்ட, அனைவரும் மெய் மறந்தனர். ஆமாம். சங்கக்கால கட்டிடத்தின் இரு சுவர்கள் இணையும் இடத்தைத் தான் அவர்கள் பார்த்தது. 

அப்போது தான் முதன் முதலில் நம் சங்கக்காலமும், நிகழ்காலமும் இணையத் தொடங்கியது.

பள்ளிச்சந்தையில் இருந்து இப்பொழுது வைகை இருக்கும் தூரம்.

தொடரும் . . . . .


Sunday, January 17, 2016


அகவை நான்பத்தும் ஐந்தும் அழிந்தது
அகத்தை ஆண்டதுஉம் அகந்தை அகன்றது
இகத்தை ஈன்றதுஉம் இனிதே இழிந்தது
சுகத்தை சுரந்ததுஉம சுந்தம் சுழிந்தது

சகத்தை சார்புஉற்றும் சந்தம் சரிந்தது
தகத்தை  தானேற்றும் தாகம் தணிந்தது
நுகத்தை தோளேற்றும் போகம் நலிந்தது
துகத்தை தேடிபிதற்றும் அகம் ஒழிந்தது.

அகவை - வயது
நான்பத்தும் - நாற்பது
அகத்தை - மனத்தை
அகந்தை - திமிர்
இகத்தை - இன்பம்
ஈன்றதுஉம - கொடுத்ததும்
சுந்தம் - சுத்தம்
சுழிந்தது - ஆரம்பித்தது
சகத்தை - உலகத்தை
சந்தம் - கருத்து, பழக்கம்
தகத்தை - நெருப்பை
நுகத்தை - பாரத்தை
துகத்தை - செல்வத்தை