Sunday, November 4, 2012

தண்ணீ கொடுங்க

டெங்கு - இப்போது தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் வைரஸ் புயல். இதனை தடுப்பதற்கு எவ்வளவோ விளம்பரங்களை செய்யும் அரசாங்கம், ஏனோ வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லவே இல்லை. என் மகளுக்கு டெங்கு வந்த பின் நான் பல டாக்டர்களிடம் ஆலோசனை செய்த பின் இதற்கு ஒரே தீர்வு தண்ணீர் தான் என்று உணர்ந்துக் கொண்டேன். முதலில் டெங்குவை கண்டறிவது எப்படி என்றுப் பார்க்கலாம்.

ஜுரம வந்த இரண்டு நாட்களுக்கு மருத்துவ விதிப்படி எந்த மாதிரியான ஜுரம என்பதைக் கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். எனவே முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாராசிட்டமல் மாத்திரைகளையும், ஆண்டி-பியோடிக் மாத்திரைகளையும் மட்டுமே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். இதையும் தாண்டி டெங்கு அல்லது எந்த மாதிரியான வைரஸ் ஜுரம என்பது தெரியாத வரையில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் என் அனுபவத்தில், சாதாரண ஜுரம வந்தவர்களால் நன்றாக சாப்பிட முடிகிறது அல்லது நன்றாக தண்ணீர் குடிக்க முடிகிறது. ஆனால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களால் தண்ணீர் குடிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. நாமும் பாவம் குழந்தை ஜுரத்தால் எதுவும் சாப்பிட முடியவில்லை என்று விட்டுவிடுகிறோம். மீறி நாம் வற்புறுத்தி தண்ணீர் கொடுத்தாலும் வாந்தி தான் வருமே ஒழிய நீர் உள்ளே போவதில்லை.

டெங்குவின் இன்னொரு பெயர் எலும்பை முறிக்கும் காய்ச்சல். டெங்கு என்பதை உடனடியாக அறிய தலையில் முன்பக்கம் (கண்களின் பின்புறம்) கடுமையான வலி இருக்கும். ஜுரமும் அதிகரிக்கும் 104 டிகிரிக்கு மேல் ஜுரம இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மூட்டு வலியும் இருக்கும். 50 முதல் 80 சதவிகிதம் பேருக்கு தோலில் சிகப்பாக கடுகு அளவிற்கு புள்ளிகள் தோன்றும். தோலை அழுத்தினாலும் இந்த புள்ளிகள் மறையாது. சிலருக்கு மூக்கிலும், பல் ஈறுகளிலும் ரத்தம் கசியலாம். WBC Count மிகவும் குறைவாக இருக்கும். இதை எல்லாம் விட முக்கியமானது platlet counting.  சாதாரணமாக platlet counting 1,50,000 - 4,50,000 வரை இருக்கும். இந்த platlet counting ஒரு நாளைக்கு 30,000 வரை குறைந்தால் நிச்சயமாக ஏதோ  ஒரு தவறு நம் உடம்பினுள் நடக்கிறது என்று அர்த்தம். இந்த platletகள் தான் நம் ரத்தத்தை உறைய வைக்கின்றன. இவை குறைவதால் தான் பல் ஈறுகளிலும் மூக்கிலும் ரத்தம் உறையாமல் வெளியேறுகிறது. Platlet எண்ணிக்கை 1,00,000க்கு குறைந்தால் நோயாளிக்கு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். டெங்கு எலும்பை பதம் பார்ப்பதால் எலும்பு மச்சையில் இருந்து உருவாகும் platlet குறைகிறது.

டெங்குவா என்று கண்டறிய வழிகள் (ஒரு வாரத்திற்குள்):
1.     ஜுரம 104 டிகிரிக்கு மேல்.
2.     தலையின் முன்பக்கம் கண்களுக்கு பின் வலி.
3.     கை, கால், மூட்டு வலி.
4.     பல் ஈறுகள், மூக்கினில் ரத்த கசிவு.
5.     Platlet count 1,00,000க்கும் குறைவு அல்லது தினமும் 30,000 குறைவது.
6.     வாந்தி.
7.     ஆகாரம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமை.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரை அணுகவும். 

டெங்கு கண்டறிவதற்கான டெஸ்ட்கள்.

CBC - WBC Count, Platelet Count, Haematocrit
S. Protien, S. AlbuminLiver Function TestsUrine - microscopic haematuriaDengue IgG & IgM


நான் பல மருத்துவரை கேட்ட வரை இதற்கு மருந்து தண்ணீர் தான். ஆனால் தண்ணீர் குடித்தால் வாந்தி வரும். தண்ணீரை ஒரு டீ ஸ்பூனில் எடுத்து உதட்டில் வையுங்கள். அந்த தண்ணீர் சிறிது சிறிதாக தொண்டையினுள் இறங்கட்டும். இதை மட்டும் நீங்கள் செய்யாவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகி விடும். ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் (அல்லது சாத்துகொடி சாறு ) கொடுக்க வேண்டியது கட்டாயம்.

ஒரு வாரத்திற்கு பின் டெங்கு படிப்படியாக குறைந்து வர வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அதன் பின் ஒரு கடுமையான யுத்தத்தை அது உடம்பினுள் ஆரம்பிக்கும். இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஜுரம. ஜுரம விட்டு விட்டால் டெங்கு போய் விட்டது என்று நாம் நினைத்துக் கொண்டு மருத்துவத்தை நிறுத்தி விடுகிறோம். ஆனால் ஜுரம குறைந்த பின் தான் டெங்கு தன் வேலையை துவங்குகிறது. ஜுரம போன பின் உங்கள் WBC count, Platlet count சாதாரண நிலைக்கு திரும்பி விட்டால் பயமில்லை. அவ்வாறு திரும்ப வில்லை என்றால் டெங்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது என்று அர்த்தம்.

மனம் தடுமாற்றம், அரிப்பு, அதிக தூக்கம் அல்லது மிதமான மயக்கம், குறைவான நாடித் துடிப்பு போன்றவை டெங்கு போவதற்கான அறிகுறிகள்.

இதை மருத்துவர்கள் ஷாக் (shock) என்கிறார்கள். இதன் அறிகுறிகள்.
1.     உடம்பு மிகவும் சில் என்று இருக்கும். ஒருவர் கையை தொடும்போதே ஐஸ் போல இருக்கும்.
2.     நாடித் துடிப்பு குறைவாக இருப்பது.
3.     ரத்தக் கசிவு. பல் ஈறுகளில், மூக்கினில், எச்சிலில், கழிவில்.
4.     தோல் சிவப்பு நிறமாக மாறுதல்.
5.     வாயை சுற்றி அல்லது உதடு நீலமாக மாறுதல்.

இந்த ஷாக் வந்த பின் நோயாளிகளை காப்பாற்றுவது சிறிது கடினமாக ஆகிவிடுகிறது. இதில் மிகப் பெரிய கொடுமை இந்த ஷாக் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தான் அதிகமாக தாக்குகிறது. நுரையீரல் சுற்றி நீர் கட்டுவது முதலில் ஆரம்பிக்கிறது. இதனால் மூச்சு விடுவது சிரமமாகிறது. மருத்துவரைப் பொறுத்த வரை இதில் பிரச்சினை என்னவென்றால், குழந்தை கடைசி வரை நன்றாக பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும். ஷாக் வந்தால் உடனே அனைத்தும் அடங்கி விடும். (இந்த நிலையில் தான் என் மகள் இருந்தாள்), ஆனால் இது நடப்பது ஆயிரத்தில் ஒருவருக்குத் தான். (தமிழ் நாட்டில் நூற்றுக்கு ஒருவருக்கு என குறைந்து வருவதாக சொல்கிறார்கள்). இந்த ஷாக் வந்த பின் காப்பாற்றபடுவது வெறும் இரண்டு சதவிகிதம் தான். 

டெங்குவிலிருந்து உங்களை (உங்கள் குழந்தைகளை) காப்பாற்றிக் கொள்ள :
1.  உடல் முழுக்க மறையுமாறு உடை அணியுங்கள்.
2.  வெளிர் நிற ஆடைகள் அணியுங்கள். கரு (dark) நிற ஆடைகளை கொசுக்கள் மிகவும் விரும்பும்.
3.  நமக்கெல்லாம் முன்பே தெரிந்த கொசு விரட்டிகள், கொசு வலைகள்.
4.  Air Condition கொசுவை ஒரே இடத்தில் முடங்க வைக்கும்.

ஆக டெங்குவுடன் போராட நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தண்ணீர் மட்டும் தான்.

நீரின்றி அமையாது உலகு.

Wednesday, August 15, 2012

அறிவு என்றால் என்ன?


என் அண்ணன் ஒருவர் இன்று வீட்டிற்கு வந்திருந்தார். பேசி முடித்த பின் கோயில் வரை வந்து விட்டு விட்டு செல்லுமாறு கேட்டார். கோயிலுக்கு அருகில் செல்லும்போது ஒலிபெருக்கியில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தது கேட்டது. அப்போது தான் இன்று ஆகஸ்ட் 15 ஆகிற்றே அருணகிரிநாதர் திருவிழா நடக்கிறதே என்ற ஞாபகம் வந்தது. அருணகிரிநாதர் திருவிழா என்பது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 அன்று மூன்று நாட்கள் வெகு விமரிசையாய் நடக்கும் ஒரு விழா. இரவு முழுவதும் சொற்பொழிவுகளும், சொற்போர், பட்டி மண்டபம் போன்றவை நடக்கும். கோயில் உட்புறம் மட்டுமில்லாது கோயில் வெளிப் புறத்திலும் கூட்டம் அலை மோதும். ஆனால் நேற்று என்னவோ கூட்டம் குறைவு தான்.

நான் கடையில் வேலை செய்துக் கொண்டிருந்தவன் அப்படியே கிளம்பி போனதால் (லுங்கியுடன்), என்னால் உள்ளே சென்று அமர முடியவில்லை. அதோடில்லாமல் ஒரு லேப்டாப்பை பிரித்து போட்டுவிட்டு வந்தேன். எங்கே யாராவது கஸ்டமர் வந்து அதை கலைத்து விடுவார்களோ என்ற பயம் மனத்தை அரித்துக் கொண்டிருந்ததால் என்னால் அங்கே நிற்கக் கூட முடியவில்லை. அண்ணனை விட்டு விட்டு கிளம்பும் போது ஒருவர் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. எதோ ஒரு பழந்தமிழ் பாட்டை விளக்கிக் கொண்டிருந்தார். அந்த பாடலையோ பேசிக் கொண்டிருந்தவர் பேரோ எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு வரி என் முதுகுத் தண்டை சில்லிட வைத்தது.

"பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு".


அறிவு என்பதைப் பற்றி இதை விட அற்புதமான விளக்கத்தை யாரும் சொல்ல முடியாது. கடைக்கு வந்த பின் எல்லா வேலைகளும் முடித்த பின் அந்த வரி என் மனதினுள் ஓடிக கொண்டே இருந்தது. நாம் முன்பே அறிந்த பல விஷயங்களை இந்த ஒரு வரி போதும் விளக்க.

சுய முன்னேற்ற புத்தகங்களில் பாதியளவு தண்ணீர் நிரப்பப்பட்ட கிளாஸ் பற்றி எல்லோரும் சொல்லுவார்கள். மீதி பாதியில் தண்ணீர் இல்லை என்பவரை விட பாதி தண்ணீர் பாதி காற்று உள்ளது என்று பார்ப்பவன் தான் தன்னிம்பிக்கை அதிகம் உடையவன் என்று. பார்க்காத காற்றை பார்த்தவன் தான் அறிவுள்ளவன்.

மேலாண்மை புத்தகங்களில் சொல்லுவார்கள். இல்லாத ஒரு பழக்கத்தை மக்களிடையே ஏற்ப்படுத்தி அவர்களுக்கு ஒரு பொருளை விற்பது தான் சிறந்த விற்பனை. நம் நாடுகளில் காபியும், அழகு சாதன பொருட்களும் விற்கபடுவது இந்த அறிவை வைத்து தான். நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு கதை ஆப்பிரிக்காவில் செருப்பு விற்கலாமா என்று ஆராய அனுப்பி வைத்த இருவரின் முடிவுகள். யாருமே செருப்பு இங்கு போடுவதில்லை எனவே இங்கு செருப்பு விற்கவே முடியாது என்று சொன்னவர். பார்த்ததை மட்டும் பார்த்தவர். இங்கு இதுவரை யாருமே செருப்பு பற்றி அறிந்திருக்கவில்லை எந்த செருப்பு கம்பனியும் இங்கு இல்லை. எனவே இது தான் சிறந்த இடம் என்று பார்க்காததை பார்த்தவர் தான் அறிவானவர்.

பக்தி மார்க்கத்திலும் அப்படித் தான். பார்க்கும் கல்லை மட்டும் நீங்கள் பார்த்தால் அது கல் தான். பார்க்காத கடவுளை நீங்கள் பார்த்தால் தான் அது கடவுள்.

சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் System analysis and design (SAD) பற்றி பாடம் எடுக்க குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு புத்தகத்தில் ஒரு நல்ல ப்ரோக்ராம்மர் (Programmer) என்பவர் யார் என்பதை பற்றி விளக்கி இருந்தார்கள். பிரச்சினையை முழுமையாக புரிந்துக் கொண்டவர், அப்பிரட்சினைக்கு பலதரப்பட்ட தீர்வுகளை வைத்திருப்பவர், அந்த தீர்வுகளில் எந்த தீர்வு செயல்படுத்த முடிந்தது என்று தேர்ந்தெடுக்கும் தன்மை உடையவர் மட்டுமில்லாது, அந்த ப்ரோக்ராம்மை நடைமுறைப் படுத்தும் போது எப்படியெல்லாம் பிற்காலத்தில் பிரச்சனைகள் வரலாம் என்பதும் அதற்கான தீர்வை இப்போதே இணைப்பதும் ஆன அறிவைக் கொண்டவர் தான் சிறந்த ப்ரோக்ராம்மர். இந்த கடைசி வரி எனக்கு மிகவும் பிடித்தது. நான் இப்போதும் ஒரு ப்ரோக்ராம்மை படித்தால் அதில் உள்ள குறைகள் தான் எனக்கு முதலில் தெரியும் (தப்புக் கண்டுபிடிப்பதில்லேயே குறியா இருக்காம்பா. வாத்தியார் பிள்ளைன்னு நிரூபிக்கிறான் பார். என்று ஓட்டுவார்கள்). சில சமயங்களில் ஒரு ஏடாகூடமான நிலையை கூறி விட்டு இந்த நிலையில் இந்த ப்ரோக்ராம் இயங்காது என்று கூறுவேன் அதற்கு அப்படி ஒரு நிலை எல்லாம் வராது என்று என் சக ப்ரோக்ராம்மர்கள் சொல்லி என் கருத்தை மறுப்பார்கள். ஆனால் பின்னாளில் அதே நிலையில் அந்த ப்ரோக்ராம் இயங்காமல் போயிருக்கிறது. (இவன் வாயை வெச்சான். அதனால் தான் இப்படி ஆகிட்டது என்று கடைசியில் என் பேரில் தான் பழி வரும்). இது போல் முன்னாள் ப்ரோக்ராம்மர் யோசித்திருந்தால் Y2K பிரச்சினை வந்திருக்காது.
ஆனால் இன்று அறிவுக்கு, மேல் நாடுகளில் குழப்பமான மிக நீண்ட விளக்கங்களை மாறி மாறிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது பல நூறு வருடங்களுக்கு முன்பே அதை சுருக்கமாகவும் சரியாகவும் சொன்ன நம் முன்னோர்களுக்கு நிச்சயமாய் நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இப்பொழுது கூட ஏதாவது டிக்சனரி எடுத்து பாருங்கள். அறிவு என்பது அவர்களை பொறுத்த வரை அனுபவத்திலும், படிப்பதாலும் கிடைப்பது தான் அறிவு என்றிருக்கும். அப்படியானால் புது புது விஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் அறிவில்லாதவர்களா?


அறிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும்அனுபத்தாலும்கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன.


OXFORD Dictionary

Definition of knowledge

noun

[mass noun]
·                     1facts, information, and skills acquired through experience or education; the theoretical or practical understanding of a subject:


Merriam Webster


 Definition of KNOWLEDGE

the fact or condition of knowing something with familiarity gained through experience or association (2) :acquaintance with or understanding of a science, art, or technique

எனக்கு இந்த விரிவுரைகளைக் படித்த பின் எழுந்த கேள்வி இது.
Then what is the difference between knowledge and “data processing and information processing”. If two are same whether our computers have the knowledge?

Saturday, May 26, 2012

ஏன் இப்படி நடக்கிறது.

நான் சொல்லப் போகும் பல விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம். உங்கள் அறிவுக்கும் மனதிற்கும் ஒத்து வராமல் போகலாம். நான் ஒவ்வொரு பிரச்சனையையும், எப்போதும் பாதிக்கப்பட்டவர் பார்வையிலிருந்து விலகி பாதிப்பை ஏற்படுத்தியவர் ஏன் அப்படி செய்தார் என்று பார்ப்பவன். அவ்வாறு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். பல நேரங்களில் நம் கோபமும் வெறுப்பும் எவ்வளவு பைத்தியகாரத்தனம் என்று புரியும். எனக்கு கணினியை விட மனித மனதின் (human psychology) மேல் ஆர்வம அதிகம். Irrational thinking என்று நாம் சொல்லிக் கொள்ளும் பல விஷயங்கள் தான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அச்சாரமாக இருந்திருக்கிறது.
எவனோ ஒருவன் ஒரு தவறு செய்தால் அதற்காக அவனை திட்டி தீர்க்கும் நாம், அதே தவறை நாமோ அல்லது நமக்கு மிகவும் வேண்டபட்டவரோ செய்யும் போது ஒரு உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி நம் தவறையே சரி என விவாதிப்போம். அடுத்தவர் செய்யும் போது தவறென பட்டது இப்போது எப்படி சரியானது. இதுவும் ஒரு irrational thinking தான். மாத்தி யோசி என்று நாம் அடிக்கடி சொல்வதை நாம் நம் சொந்த விஷயங்களுக்காக மட்டுமே செயல்படுத்துகிறோமே ஒழிய மற்றவர் பிரச்சனைகளுக்கு நாம் காலம் காலமாக பின்பற்றிவரும் கலாச்சார விதிகளை மட்டுமே பின்பற்றுகிறோம்.
இவ்வளவு பீடிகையை போடுவதற்கு காரணம், என் கடையின் முன் நடந்த ஒரு சிறு கலவரம். நேற்று மதியம் ஒரு மணி வாக்கில், என் கடை முன் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு 35 வயது ஆண் இறங்கி என் கடையின் பக்கத்தில் உள்ள வக்கீல் ஒருவரை பார்க்க போனார். சிறிது நேரத்தில் இளவட்டங்கள் என் கடையின் அருகில் கூட துவங்கினர். நம் மூலையில் வழக்கம் போல எச்சரிக்கை மணி அடித்தது. நாம் ஒன்றும் பெரிய தாதா இல்லை என்றாலும் நாம் வெளியே போய் நின்றால் ஏரியா அமைதி ஆகிவிடும். (நல்லா பார்த்துக்கோ நானும் ரவுடி நானும் ரவுடி). திடீரென ஒருவன் அந்த காருக்கு அருகில் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான். எனக்கு எதிர் பக்கம் இருந்ததால் என்னால் யாரிடம் பேசுகிறான்  என பார்க்க முடியவில்லை. உடனே ஒரு ஆட்டோ வந்து காரின் பக்கத்தில் நின்றது. அதிலிருந்து ஒரு பெரியவர் இறங்கினார். இறங்கிய வேகத்தில் காரின் பக்கத்தில் இருந்து பெசிக்கொண்டிருந்தவனை சரமாரியாக வசை பாடிக்கொண்டே அவனை அடிக்க போனார். ஆனால் கடைசி வரை அடிக்கவில்லை. அவருக்கு யாரையும் அடித்து பழக்கமில்லை போலும். வக்கீலை பார்க்க போனவர் குடு குடு என்று ஓடி வந்தார். மூவருக்கும் வாக்குவாதம் ரோடிலேயே வலுக்கவே, நாங்கள் எங்கள் மூக்கை நுழைக்க வேண்டி வந்தது. காரினுள் எட்டி பார்த்தால் ஒரு பெண் தன் ஒன்றரை வயது மகனுடன் உட்கார்ந்திருந்தாள்.
மூவரையும் விசாரித்த பொழுது கிடைத்த தகவல்கள்.
அந்த பெண் அவரின் திருமணத்திற்கு முன்பே காரின் அருகில் நின்று தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பையனை காதலித்திருக்கிறாள். தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில், தன் அத்தை மகனை திருமணம் செய்திருக்கிறாள். அவர்கள் இருவரும் நன்றாக திருமண வாழ்க்கை வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்ற பின் அந்த மாஜி காதலன் மூலம் புயல் அடித்திருக்கிறது. அவன் எப்படியோ அந்த பெண்ணின் செல் நம்பரை கண்டுபிடித்து, இன்னும் அவன் அவளை காதலிப்பதாகவும், அவளுக்காக உயிரை விடப் போவதாகவும், அப்போது கூட தன் கை மணிக்கட்டை அவளை நினைத்து அறுத்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறான். உடனே இந்த பெண்ணிற்கு பழைய காதல் மீண்டும் அரும்பியிருக்கிறது. இருவரும் முன் போல் பழகி இருக்கிறார்கள். இது அந்த பெண்ணின் கணவனுக்கு தெரிந்து விட அவன் எவ்வளோவோ சொல்லி பார்த்திருக்கிறான். ஆனால் அந்த பெண் திருந்துவதாக இல்லை. எனவே மண முறிவு ஒப்பந்தத்தை எழுதுவதற்காக வக்கீலை பார்க்க வந்திருக்கிறான். அந்த கணவனோ தன் குழந்தை தன்னிடமே இருக்க வேண்டும் என்று அடம பிடிக்கிறான். அந்த பெண்ணோ குழந்தையை தானே வளர்பதாக கூறுகிறார். அவளின் காதலனும் அந்த குழந்தையை தான் நன்றாக வளர்பேன் என்று கூறுகிறான்.
அந்த கணவன் இந்த விஷயத்தை எப்படி கூனி குறுகி சொல்கிறான் என்று பார்க்கும் போது அவன் மேல் நிச்சயம் பரிதாப படாமல் இருக்க முடியவில்லை. தன் குடும்ப மானமும், தன் தாய் மாமனின் குடும்ப மானமும் போகிறதே என அவன் கஷ்டபடுவது தெரிந்தது. அந்த பெண்ணை தனியே அழைத்து அவள் தன் கணவனை விட்டு பிரிவதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு அவள் மறுபடியும் மறுபடியும் சொன்னது, “என் கணவரை பற்றி நான் எதுவும் குறை கூற முடியாது. அவர் என்னை நன்றாக தான் வைத்திருக்கிறார் ஆனால் என் பழைய காதலன் நான் இல்லை என்றால் செத்துவிடுவேன் என்று கூறுகிறான். அவன் காதல் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் என்னை அவனுடனே சேர்த்து வையுங்கள்.
நாங்களும் அந்த பெண்ணை தனி தனியாக கேள்வி மேல் கேள்வியாக கேட்டோம். அவள் சொன்னதிலிருந்து, அவள் கணவன், மிகவும் மரியாதையாக தான் அவளை நட்துவதாக் தெரிந்தது. இவ்வளவு பிரச்சனைக்கு நடுவிலும் அவன் அவளை போம்மா வாம்மா என்று தான் சொன்னானே தவிர அவள் இவள் என்று கூட சொல்லவில்லை. மாதம் நாற்பதாயிரம் ருபாய் சம்பளம் வாங்குகிறான். நன்றாகத்தான் அவளை வைத்திருக்கிறான். பின் எதுதான் பிரச்சினை? அவளிடம் விசாரணை செய்ததில் பணத்திற்கோ, பாசத்திற்கோ, மரியாதைக்கோ, காமத்திற்கோ அவன் எந்த குறையும் வைக்கவில்லை. Psychologist இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். தன் கணவனோடு அவள் முழுமையாக வாழவில்லை. அவள் மனதிற்குள் இன்னும் பழைய காதலன் தான் இருக்கிறான்- என்று. ஆனால் இதையெல்லாம் நம் தினசரி வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால தவறு என்று புரியும். எத்தனையோ பேர் முதல் காதலை நெஞ்சினில் சுமந்து குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள். முதல் காதல் மறுபடியும் குறுக்கிட்டாலும் நாசுக்காய் நகர்ந்து போகிறவர்கள் பல்லாயிரம் பேர். பின் இது போல் நடப்பதற்கு காரணம் என்ன?
ஒரு பெண்ணிற்கு நாம் தரும் சுதந்திரம் தவறா? அல்லது திடீரென கிடைத்த சுதந்திரத்தினால் பெண்கள் தாங்கள் செய்வது எல்லாமே சரி என்ற தவறான கருத்துக்கு வந்து விட்டார்களா? ஆனால் இந்த பிரச்சனையை நம் சமூகம் எப்படி எதிர் கொள்கிறது? இந்த பிரச்சனைக்கு எங்கள் தெரு பஞ்சாயத்துக்கள் சொன்ன தீர்ப்பு, “கொஞ்ச நாள் அந்த பெண் அவளின் தந்தையுடன் இருக்கட்டும். இரண்டு மாதம் பொறுத்து பார்க்கலாம்.
பஞ்சாயத்து செய்தவர்களை கூப்பிட்டு கேட்டேன். “நீங்கள் யார் மேல் தவறு என்று நினைக்கிறீர்கள்?”. எல்லோருமே அவள் காதலனைத்தான் குற்றம் சொன்னார்கள். அந்த பெண் செய்தது தவறாக தெரியவில்லையா? என்று கேட்டால், “அவள் பெண் பாவம், அவள் என்ன செய்வாள்? இவன் திரும்பவும் அவளுக்கு போன் செய்யாமலிருந்தால் அவள் இது போல் நடந்துக் கொண்டிருக்க மாட்டாள். என்று அந்த பெண்ணிற்கு சாதகமாகவே பேசினார்கள். அந்த பையனின் வாழ்க்கை என்னாவது? என்றதற்கு, “அவனுக்கென்ன அவன் ஆம்பிள்ளை இவள் திரும்பவும் வந்தால் சேர்ந்து வாழப்போகிறான். இல்லை என்றால் வேறொரு பெண்ணை திரும்பவும் திருமணம் செய்து கொண்டு வாழப்போகிறான். என்றார்கள். அப்படி என்றால் இத்தனை நாளாய் அவன் அவளுக்காக வாழ்ந்தது?, “அதெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விட வேண்டியது தான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், “இன்னும் இந்த சமூகம் ஒரு பெண்ணை பழங்காலத்து அடிமை பெண்ணாகவோ அல்லது weaker sex ஆகவோ தான் பார்க்கிறது. ஆனால் பெண்கள் இதை மிக சரியாக பயன்படுத்தி அவர்களுக்கு சாதகமாக அவர்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்கிறார்கள். நான் அனைத்து பெண்களையும் இந்த குற்ற சாற்றிற்கு உட்படுத்த விரும்பவில்லை. தவறு செய்யும் கணவனை திருத்தி அவனை பெரிய ஆளாய் ஆக்கிய பல பெண்களை எனக்கு தெரியும். தான் காதலித்த குற்றத்திற்காக முழு குடும்ப பொறுப்பையும் சுமந்து கொண்டு குடும்ப தலைவன் வேலையும் சேர்த்து செய்து மாடாய் உழைக்கும் பல வெளியே தெரியாத பெண்கள் இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள்.
அந்த கணவனின் மன நிலையை யாராவது உணர்ந்திருக்கிறார்களா? ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்று சொல்லும் நாம் ஏன் ஒரு ஆணின மனத்தை இன்னொரு ஆணுக்கு தெரிவதில்லை. அவன் தன் மனைவி என்பதற்காக அவளை சந்தோஷமாக வைத்திருப்பதற்காக எவ்வளவு உழைக்கிறான் என்பதும் அவனுக்குள்ளும் ஒரு பாசம் உண்டு என்பதும் ஏன் எந்த மற்ற ஆணுக்கும் அந்த சட்டத்தை ஏற்றும் ஆண்களுக்கும் புரிவதில்லை. ஓஷோ அழகாக சொல்லி இருக்கிறார். “ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் உண்டு. ஒவ்வொரு பெண்ணுக்குக்குள்ளும் ஒரு ஆண் உண்டு. பெண்ணுக்குள் இருக்கும் ஆண் வெளியே வந்தால் எந்த ஒரு ஆணாலும் அதை வெல்ல முடியாது. ஆணுக்குள் இருக்கும் பெண் வெளியே வந்தால் எந்த ஒரு பெண்ணாலும் அதை வெல்ல முடியாது. (அவர் உள்ளே இருக்கும் ஆண் என்று சொல்லுவது வீரம் மற்றும் காமம், உள்ளே இருக்கும் பெண் என்று சொல்லுவது அன்பு, பாசம்). இப்போது உள்ள பிரச்சனை இரண்டுமே வெளியே வந்திருப்பதுதானோ?
ஆனால் என்னை பொருத்தவரை த்னசரி நாளேடுகளில் பார்க்கும் போதெல்லாம் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களை விட கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகள் அதிகமாகி கொண்டே வருகிறார்கள்.
எல்லா பிரச்சனைகளும் முடிந்த பின் டீ கடையில் உட்கார்ந்து இருந்த போது ஒரு இளைஞன் என்னிடம் வந்து ஆக்ரோஷமாக சொன்னான். “எழுதி வச்சிக்கோ அண்ணே. இந்த காலத்து பசங்க ரொம்ப கற்புடையவங்க. ஆனா பொண்ணுங்க தான் ரொம்ப கெட்டு போய்க்கினு இருக்காங்க. அவன் சொன்னதின் உண்மை என் மனதை பிசைந்தது.
பாரதியை தேடிக்கொண்டிருக்கிறேன் “கற்பு நிலை தனை பொதுவில் வைப்போம் என்று எதை நினைத்து எழுதினாய். இரண்டு பேருமே கற்பில்லாமல் வாழ்வதற்கா?
பின் குறிப்பு : மேற்கண்ட சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் ஒரு சாமியாரை சந்தித்தேன். அவரின் சொந்த கதை, ஒரு கள்ள காதல் ஒரு குடும்பத்தை எப்படி நாசமாக்குகிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அதை இன்னொரு நாள் எழுதுகிறேன்.