Monday, September 21, 2015

பிள்ளை (யார்?) - II - ஆரிய கடவுளா?

பிள்ளையார் ஒரு ஆரிய கடவுளா என்பதை ஆராய, ஆரியர்களின் பழம்பெரும் புத்தகமான வேதங்களை பார்ப்போம்.

ரிக் வேதம்

வேதங்களில் முதன்மையானது வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில் எங்கேயுமே பிள்ளையார் பற்றி இல்லை. இருந்தாலும் ஒரு சிலர், அதில் வரும் ஒரு சுலோகத்தை கணபதியை குறிப்பதாக சொல்லுவார்கள். அது ரிக் வேதம் இரண்டாம் தொகுதியில் 23ஆம் சுலோகமாக வருகிறது. விநாயகர் முழு முதற் கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவரைப்பற்றி ஏன் 214வது சுலோகத்தில் சொல்ல வேண்டும். அதுவுமில்லாது, ரிக் வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பிள்ளையார் வருவதாக கூறுகிறார்கள். அதிலும் இதில் முதல் வரியில் மட்டும். 

இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது, இந்த 214 மட்டுமின்றி அடுத்து வரும் 215, 216 மற்றும் 217 ஆகியவை தேவ கணங்களின் தலைவரான் ப்ரஹஸ்பதியை குறிக்கிறது. இது விநாயகரைத் தான் குறிக்கிறது என்று சொல்லுபவர்கள் சுட்டிக்காட்டும் காரணம் அதில் வரும் ஒரு வார்த்தை, "கணபதிம்". இதற்கு என்ன அர்த்தம் கணம்களின் அதிபதி என்று அர்த்தம். கணங்களின் அதிபதி ப்ரஹஸ்பதி என்று முன்னமே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக பிள்ளையாரின் யானை தலையை பற்றியோ, தொந்தியை பற்றியோ இதில் எந்த குறிப்பும் இல்லை. மேலும், ப்ரஹஸ்பதி கணங்களின் தலைவர், போரில் நல்லவர்களை பாதுகாப்பவர், உடலை, விளைச்சலை பாதுகாப்பவர். செல்வங்களை அளிப்பவர். இவர் இடத்தை தான் பின்னாளில் விநாயகர் பிடித்துக் கொண்டார். இவருக்கும் விநாயகருக்கும் என்ன வித்தியாசம். இவர் முனிவர், மனிதனை போல் உடல் கொண்டவர். இவருக்கு தொந்தியோ, தும்பிக்கையோ கிடையாது.

ப்ரஹஸ்பதியை பாடும் அந்த சுலோகம்

ghaṇānāṃ tvā ghaṇapatiṃ havāmahe kaviṃ kavīnāmupamaśravastamam | 
jyeṣṭharājaṃ brahmaṇāṃ brahmaṇas pata ā naḥ ṣṛṇvannūtibhiḥ sīda sādanam || 

ghaṇānāṃ - கணனம் - கணங்களின்
tvā - தாங்கள்
ghaṇapatiṃ - கணங்களின் தலைவர்.
havāmahe - உங்களை வேண்டுகிறோம்
kaviṃ kavīnām - மெய்யறிவின் மெய்யறிவே
upamaśravastamam - அனைவரை விட புகழுடையவரே.
jyeṣṭharājaṃ  brahmaṇāṃ - வேண்டுதலின் முதல் அரசரே
 brahmaṇas pata ā naḥ - ஓ! ப்ரஹஸ்பதி
ṣṛṇvannūtibhiḥ - எங்கள் வேண்டுதலை கேளுங்கள்.
sīda sādanam - எங்கள் வேள்வியை ஏற்றுக்கொண்டு வந்து அமருங்கள்.

       இதில் எங்கு விநாயகர் வருகிறார்.

ரிக் வேதத்தை பொறுத்தவரை முக்கிய தெய்வங்கள் எனப்படுவது :
இந்திரன், வருணன், அக்னி, ருத்ரன், மித்திரன், வாயு, சூர்யன், விஷ்ணு, சாவித்ரி, பூசன், உஷா, சோமா, அஸ்வின் (2 பேர்), மாருத், எட்டு திசைகள், 12 ஆதித்யர்கள், வசிஷ்டா, ப்ரஹஸ்பதி, யமன், மன்யு, புருஷா,சரஸ்வதி, .. இப்படி செல்கிறது. இதில் எங்கேயும் விநாயகர் இல்லை.

அதற்காக பிள்ளையார் வேதங்களில் எங்கேயும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இருக்கிறார். ஆனால் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தில் இல்லை.

வேறெங்கு இருக்கிறார் என்று அடுத்து பார்க்கலாம்.

Wednesday, September 16, 2015

பிள்ளை - (யார்)? - I

பொறுப்பு துறப்பு : எனக்கு கிடைத்த தகவல்கள், உண்மையாக இருக்குமா என்று எனக்கிருக்கும் சிறு ஆறாவது அறிவை உபயோகித்து பிரித்தறிந்து, என் மனம் ஒத்துக் கொண்டதை மட்டுமே இங்கே எழுதுகிறேன். நான் நாத்திகனோ, ஆத்திகனோ அல்ல. நான் எந்த இசத்தையும் சார்ந்தவனில்லை. உங்களுக்கு நான் எழுதுவதில் மாற்றுக் கருத்து இருப்பின், கட்டாயம் இங்கே பகிரலாம், வரம்புக்கு உட்பட்டு. தயவு செய்து உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை தவிர்க்கவும்.

 பிள்ளையார் சதுர்த்தி வந்து விட்டது. எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடவும், குழந்தைகள் களிமண் வைத்து விளையாடவும் ஆசையாய் இருப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி பற்றி எழுதலாமே என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் எண்ணங்கள் எங்கெங்கோ போய் கடைசியில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது. பிள்ளையார் எப்படி முழு முதற்  கடவுள் ஆனார்? ஏன் தமிழ் கடவுள் முருகன், முழு முதற் கடவுள் ஆகவில்லை? என்று யோசித்துக் கொண்டே, என்னிடம் உள்ள பழைய சங்க இலக்கியங்களில் எங்காவது பிள்ளையார் பற்றி குறிப்பு இருக்கிறதா என்று தேடிய போது, எங்கேயும் காணவில்லை. அப்போ பிள்ளையார் எங்கிருந்து வந்தார் என்று இணையங்களில் உலா வந்தேன். நான் படித்து, புரிந்துக் கொண்டதின் சாராம்சம் இது.

நமது தமிழ் சங்கத்தை பொறுத்த வரையில், ஐந்து நிலங்களுக்கான கடவுள்கள் ஐந்து தான். அவை,

குறிஞ்சி  - முருகன்
முல்லை - திருமால் (இவர் எப்படி ஆரியன் ஆனார் என்று தெரியவில்லை)
மருதம் - இந்திரன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை

கி.மு. 1000 முதல் கி.மு.300 வரை உள்ள வருடங்களில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இது. இதில் விநாயகரைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களிலும் முழு முதற்கடவுளான பிள்ளையாரைப் பற்றி எங்கேயும் இல்லை.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கோயில்களில் மிகவும் பழையதான மாமல்லபுரம் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோயிலிலும் பிள்ளையார் இல்லை.

நான் அறிந்த வரையில் தமிழ் இலக்கியங்களில் பிள்ளையார் முதலில் வந்தது, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் தான். ஆனால் அந்த பாடலும் பிற்சேர்க்கை தான், மூல புத்தகத்தில் அந்த பாடல் இல்லை என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஐந்து கரத்தினை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

என்ற வரிகளில் உள்ள இந்தி என்ற வார்த்தை வட மொழி சொல். யானை என்பதை நாம் களிறு என்றே இலக்கியங்களில் குறிப்பிடுவோம். அதோடு திருமுறைகளில் எதிலும் விநாயகர் காப்பு என்பதே இல்லை. இதில் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு சான்றாக, தமிழுக்கு விநாயகர் வருவதற்கு முன்பே சேக்கிழார் திருமந்திரம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி"

அதாவது "ஒன்றவன்றான்" என்று ஆரம்பித்து மூவாயிரம் பாடல் கொண்டது திருமந்திரம் என்கிறார். அப்படியானால் விநாயகர் காப்பு பிற்சேர்ப்பு என்பது புலனாகிறது.

அப்போது பிள்ளையார் எங்கிருந்து தான் வந்தார்.

"அவர் ஆரிய கடவுள்" - அதுவும் இல்லை.

அவர் ஆரிய கடவுள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரைப் பற்றி ஆராய்ந்தால் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைக்கின்றன. சினிமாவில் ஒரே பாட்டில் கதாநாயகன் பணக்காரனாக ஆவது போல், இரண்டே நூற்றாண்டுகளில் விநாயகர் இந்து, புத்த, ஜைன மதங்களின் முழு முதற்கடவுள் ஆகிவிட்டார். அதுவும் எங்கிருந்து? வில்லனின் அடியாளாய் இருந்து கதாநாயகனாய் ஆகி இருக்கிறார்.

மேலும் பல விவரங்களுடன், தொடருகிறேன்.