Wednesday, September 16, 2015

பிள்ளை - (யார்)? - I

பொறுப்பு துறப்பு : எனக்கு கிடைத்த தகவல்கள், உண்மையாக இருக்குமா என்று எனக்கிருக்கும் சிறு ஆறாவது அறிவை உபயோகித்து பிரித்தறிந்து, என் மனம் ஒத்துக் கொண்டதை மட்டுமே இங்கே எழுதுகிறேன். நான் நாத்திகனோ, ஆத்திகனோ அல்ல. நான் எந்த இசத்தையும் சார்ந்தவனில்லை. உங்களுக்கு நான் எழுதுவதில் மாற்றுக் கருத்து இருப்பின், கட்டாயம் இங்கே பகிரலாம், வரம்புக்கு உட்பட்டு. தயவு செய்து உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை தவிர்க்கவும்.

 பிள்ளையார் சதுர்த்தி வந்து விட்டது. எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடவும், குழந்தைகள் களிமண் வைத்து விளையாடவும் ஆசையாய் இருப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி பற்றி எழுதலாமே என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் எண்ணங்கள் எங்கெங்கோ போய் கடைசியில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனது. பிள்ளையார் எப்படி முழு முதற்  கடவுள் ஆனார்? ஏன் தமிழ் கடவுள் முருகன், முழு முதற் கடவுள் ஆகவில்லை? என்று யோசித்துக் கொண்டே, என்னிடம் உள்ள பழைய சங்க இலக்கியங்களில் எங்காவது பிள்ளையார் பற்றி குறிப்பு இருக்கிறதா என்று தேடிய போது, எங்கேயும் காணவில்லை. அப்போ பிள்ளையார் எங்கிருந்து வந்தார் என்று இணையங்களில் உலா வந்தேன். நான் படித்து, புரிந்துக் கொண்டதின் சாராம்சம் இது.

நமது தமிழ் சங்கத்தை பொறுத்த வரையில், ஐந்து நிலங்களுக்கான கடவுள்கள் ஐந்து தான். அவை,

குறிஞ்சி  - முருகன்
முல்லை - திருமால் (இவர் எப்படி ஆரியன் ஆனார் என்று தெரியவில்லை)
மருதம் - இந்திரன்
நெய்தல் - வருணன்
பாலை - கொற்றவை

கி.மு. 1000 முதல் கி.மு.300 வரை உள்ள வருடங்களில் எழுதப்பட்டதாக சொல்லப்படும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இது. இதில் விநாயகரைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களிலும் முழு முதற்கடவுளான பிள்ளையாரைப் பற்றி எங்கேயும் இல்லை.

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கோயில்களில் மிகவும் பழையதான மாமல்லபுரம் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோயிலிலும் பிள்ளையார் இல்லை.

நான் அறிந்த வரையில் தமிழ் இலக்கியங்களில் பிள்ளையார் முதலில் வந்தது, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் தான். ஆனால் அந்த பாடலும் பிற்சேர்க்கை தான், மூல புத்தகத்தில் அந்த பாடல் இல்லை என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஐந்து கரத்தினை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

என்ற வரிகளில் உள்ள இந்தி என்ற வார்த்தை வட மொழி சொல். யானை என்பதை நாம் களிறு என்றே இலக்கியங்களில் குறிப்பிடுவோம். அதோடு திருமுறைகளில் எதிலும் விநாயகர் காப்பு என்பதே இல்லை. இதில் மட்டும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதற்கு சான்றாக, தமிழுக்கு விநாயகர் வருவதற்கு முன்பே சேக்கிழார் திருமந்திரம் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி"

அதாவது "ஒன்றவன்றான்" என்று ஆரம்பித்து மூவாயிரம் பாடல் கொண்டது திருமந்திரம் என்கிறார். அப்படியானால் விநாயகர் காப்பு பிற்சேர்ப்பு என்பது புலனாகிறது.

அப்போது பிள்ளையார் எங்கிருந்து தான் வந்தார்.

"அவர் ஆரிய கடவுள்" - அதுவும் இல்லை.

அவர் ஆரிய கடவுள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரைப் பற்றி ஆராய்ந்தால் பல ஆச்சரியமான விடயங்கள் கிடைக்கின்றன. சினிமாவில் ஒரே பாட்டில் கதாநாயகன் பணக்காரனாக ஆவது போல், இரண்டே நூற்றாண்டுகளில் விநாயகர் இந்து, புத்த, ஜைன மதங்களின் முழு முதற்கடவுள் ஆகிவிட்டார். அதுவும் எங்கிருந்து? வில்லனின் அடியாளாய் இருந்து கதாநாயகனாய் ஆகி இருக்கிறார்.

மேலும் பல விவரங்களுடன், தொடருகிறேன்.

4 comments:

  1. ​அண்ணே ... அவங்க அடிச்சி கேட்டாலும் ..சொல்லாதிங்க. !!

    ReplyDelete
  2. ஔவை எழுதிய பெற்று வேந்தன் படிக்கவும்

    ReplyDelete