Friday, January 30, 2015

கவர்னரின் ஹெலிகாப்டர் - புத்தக விமர்சனம்.

     புத்தகத்தின் பெயர் : கவர்னரின் ஹெலிகாப்டர்.
     ஆசிரியர் : எஸ்.கே.பி. கருணா
     வெளியீடு : வம்சி புக்ஸ்.
                              19, டி. எம்.சாரோன்
                              திருவண்ணாமலை - 606601.
                              செல் : 9445870995, 04175-251468
     ஓவியங்கள் : ஓவியர் கோபு
     விலை       : ரூபாய். 200/-

     அனைத்து பிரபல எழுத்தாளர்களும், புதிதாக எழுத வருபவர்களுக்கு கூறும் ஒரே அறிவுரை, "உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவத்தை எழுதிப் பாருங்கள். அதை மீண்டும் மீண்டும் படித்து, அதை மேன்மேலும் எப்படி மெருகூட்டுவது என்று மாற்றி மாற்றி எழுதிப் பாருங்கள்" என்பது தான். அதே போல், விளையாட்டாய் எழுத ஆரம்பித்து, மற்றவர்கள் போல் இல்லாமல், எழுத்தில் சுவாரசியத்தை கூட்ட வெகுச் சீக்கிரமே கற்றுக் கொண்டவர்களில் ஒருவர், SKP கருணா. முதலில் இணையத்தில் எழுத ஆரம்பித்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்தை தன் கைக்குக் கொண்டுவந்து விட்டார். அவரின் கதைகளைப் படிக்கும்போது உண்மை சம்பவம் எது, கற்பனை எது என்பது பிரித்தறியமுடியாதபடி இருப்பது அவருக்கு ஒரு ப்ளஸ். கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் நகைச்சுவை இழைந்தோடி இருக்கும்.

     இந்த புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கிறது. என்னடா இது இவ்வளவு நேரம் கதைகள் என்று கூறிவிட்டு இப்போது கட்டுரைகள் என்று சொல்றானே என்று நினைக்காதீர்கள். முன்னுரை எழுதியுள்ள திரு.அ.முத்துலிங்கம் கூட, முதலில் கட்டுரை என்றுக் குறிப்பிட்டுவிட்டு, கடைசியில் கதை என்று சொல்லுகிறார். இது கட்டுரைக் கதை அல்லது கதைக் கட்டுரை (எது சரி?). என்னைப் பொறுத்தவரை கதை என்றே சொல்கிறேன்.

     இதிலுள்ள 18 கதைகளில், 16 கதைகள் ஏற்கனவே அவர் இணையத்தில் எழுதி, நான் முன்பே படித்தது. 2 கதைகள் மட்டுமே (விரல், சாமந்தி) முன்பே படிக்காதது. இணையத்தில் எழுதிய எதையுமே, எடிட் செய்யாமல் அப்படியே கொண்டு வந்ததற்காக பதிப்பகத்தாரைப் பாராட்டலாம். புத்தகம் நல்ல GSMல் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பும் படிப்பதற்கு எளிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஓவியர் கோபுவின் உள் ஓவியங்கள் செம. மொத்தப் பக்கங்கள் 224.

    ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையை கொண்டுள்ளன. கெட்டகுமாரன், சாமந்தி போன்றவை போகிறபோக்கில் மனதை நெகிழச்செய்கின்றன. உயிர்நீரும், நினைவுகளின் வேரினூடே சில மரங்கள், ததும்பும் நீர் நினைவுகள் போன்றவை, சுற்றுப்புற சூழல் மற்றும் நீரின் அவசியம் குறித்து யோசிக்க வைக்கின்றன. கலர் மானிட்டர், பிரியாணி, விரல் போன்றவை சீரியஸாக உட்பொருள் கொண்டிருந்தாலும் நகைச்சுவை அதிகமாக எழுத்தில் தெறிக்கின்றது. சைக்கிள் டாக்டரும், அட்சயப் பாத்திரமும் முடியும்போது இதயத்தை கணக்கச் செய்கின்றன. 

     கவர்னரின் ஹெலிகாப்டர் டைட்டில் கதை. கவர்னரை, தன் கல்லூரிக்கு அழைத்து வருவதற்குள் என்னென்ன பாடுப்பட்டார் என்பதே கதை. இதை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம். மற்றபடி ஓ.கே.

     இணையதளத்தில் எழுதுவதற்கும், புத்தகமாக எழுதுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. இன்று நான் என் நாற்பதாவது வயதில் நடக்கும் நிகழ்வுகளை எழுதலாம். படிக்கும் வாசகர்கள் ஒரு நாற்பது வயது இளைஞனை கற்பனை செய்துக் கொள்வார்கள். இரண்டு மாதங்கள் கழித்து என் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எழுதினால், ஒரு பள்ளி மாணவனை கற்பனை செய்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு புத்தகமாக படிக்கும்போது, ஒரு நிமிடத்தின் முன் கல்லூரி தலைவராகவும், இந்த நொடியில் ஒரு பள்ளி மாணவனாகவும், மீண்டும் கல்லூரி தரைவராகவும் மாறி மாறி வரும்போது, வாசகனின் மனத்தில் அந்த கற்பனை பாத்திரம் உருவகம் அடைவது சற்று கடினம். இது அந்த கதையின் ரசிப்பையே குறைத்து விடும். 

     தொடர்ச்சியாக படிக்கும் போது, அதிலும் வரும் கதாநாயகன் பாத்திரம் ஒரே பெயராக இருக்கும்போது, இந்த உருவகம் சற்று தடுமாறும். அதற்குத் தான் நாவலாசிரியர்கள் பிளாஷ்பேக் பெரியதாக வைக்காமல், சிறிது சிறிதாக வைப்பார்கள். இதில் உள்ள கதைகளை வயதின்படி வரிசைப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடி இருக்கும். சாமந்தி தவிர அனைத்து கதைகளிலும் ஆசிரியரே வருவதால், சாமந்தியை ஒரு துணைக் கதையாக கடைசியாக வைத்திருக்கலாம்.

     இந்த விமரிசனத்தை எழுதுவதற்கு ஏண்டா இவ்வளவு நாள் என்றுக் கேட்கலாம். நான் என் சுய விமரிசனத்தை விட, மற்றவர்கள் விமரிசனமும் என்ன என்றுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்த புத்தகத்தை என் கடையில் உள்ள மேஜை மேல் வைத்தேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் இதை எடுத்து படிக்கிறார்களா என்று பார்த்தேன். நிறைய பேர் எடுத்து, கொஞ்சம்(!) படித்தார்கள். அவர்கள் புத்தகத்தை எடுத்து படிக்க வைத்தது எஸ்.கே.பி. கருணா என்ற பெயர் தான் என அறிந்தேன். அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, புத்தகத்தின் தலைப்பு என்ன என்று கேட்ட பின் தான் அட்டையை பார்த்து தலைப்பை சொன்னார்கள். (அதில் ஒருவர் கேட்டது சுவாரசியம். "நம்ம கருணா புக்கெல்லாம் எழுதுறாரா? த.மு.எ.க.ச. தலைவர் தானே?". "யோவ் அது கருப்பு கருணாயா, இது எஸ்.கே.பி.கருணா").

     இந்த புத்தகத்தை ஒருவரிடம் கொடுத்து, முழுவதும் படிக்க சொன்னேன். அவர் விமர்சனம்.
" நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். உரையாடல்கள் மிக தெளிவாக, ரியலாக இருக்கிறது. விலை இன்னும் கம்மியாக இருந்தால் வாங்கலாம்."

     வேறொருவரை ஒரு நாளைக்கு ஒரு கதை மட்டுமே படிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் விமர்சனம்.
"சூப்பரா இருக்குடா. நல்லாத்தான் எழுதி இருக்கிறார். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம்னாலும், செம ஜோக்கா கதையை கொண்டு போகிறார். சுய கதையை விட்டு வேற கதை எழுதும்போது தான் அவர் திறமை தெரியும்"

     இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். முதலாமவர் கதையை தொடர்ந்துப் படித்தார். இரண்டாமவர் இடைவெளி விட்டுப் படித்தார்.

     மொத்தத்தில் மிக நல்ல புத்தகம். கொஞ்சம் கூட போரடிக்காமல், சிரித்துக் கொண்டே இந்த புத்தகத்தை படிக்கலாம். எல்லாவற்றையும் விட, எந்த வித கொச்சை வார்த்தைகளும் புத்தகத்தில் இல்லை. எனவே தைரியமாக இள வயதினரிடம் படிக்க கொடுக்கலாம். அதற்காகவே, கருணாவுக்கு பாராட்டுக்கள்.

     Paper Back Edition எப்போ வரும்?

No comments:

Post a Comment