Saturday, January 17, 2015

மாதொருபாகன் - என் பார்வையில்.

பெருமாள் முருகனின் (இப்போது வெறும் பெ.முருகன், ஆசிரியர்) மாதொருபாகம் நாவல் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். ஒரு பக்கம் எரிப்பும், ஒரு பக்கம் வாழ்த்தும் எழுந்து அடங்கி விட்டது. இப்போது தான் அந்த நாவல் படிப்பதற்கு கிடைத்தது. படித்த பின் என் மனதில் தோன்றியவை இவை.

முன்னுரையிலேயே திருச்செங்கோடு தொடர்பான அவர் தேடலில் பல விஷயங்களை அவர் கண்டறிந்ததாக சொல்கிறார். 'சாமி கொடுத்த பிள்ளை' மற்றும் 'சாமி கொழந்த' என்று குறிப்பிட்டு சொல்லப்படுபவர்கள் எல்லாம் சாமியிடம் வேண்டி பிறந்தவர்கள் என்று நம்பிக்கை.ஆனால் அதன் உண்மையை எதேச்சையாக கண்டறிந்ததாக சொல்கிறார். அவர் கண்டறிந்தது என்னவென்றால் பெண்கள் திருச்செங்கோடு தேர் திருவிழா இரவு இருண்ட பின், இருட்டில் ஒரு கூட்டுக் கலவி (குரூப் செக்ஸ்) வைத்துக் கொள்வார்களாம். இருட்டில் யாருடைய முகமும் தெரியாது என்பதால் பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வராதாம். அப்போது வரும் ஆண்களை, பெண்கள் கடவுளே வந்திருப்பதாக நினைத்துக் கொள்வார்களாம். அப்படி பிறந்த குழந்தைகள் தான் சாமி கொடுத்த பிள்ளைகளாம்.

ரத்தன் டாட்டா அறக்கட்டளையின் 'கலைகளுக்கான இந்திய மையம்', இதற்க்கு பண உதவி வழங்கியிருக்கிறது. இந்த உதவி வழங்குவதற்கான உடன்படிக்கையிலும் கலைகளை பற்றிய ஆராய்ச்சியும், அதற்கான் சான்றுகளும் அவசியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாள் முருகன் தன்னுடைய முன்னுரையில் வ.கீதா, ஆ.இரா.வேங்கடாசலபதி, க்ரியா.ராமகிருஷ்ணன் மற்றும் பூமணி ஆகியோர் ஆய்வு தொடர்பாக உதவியதாக சொல்லியிருக்கிறார். இந்த பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தபோது ஆதாரம் எல்லாம் கிடையாது. எல்லாம் சொல் கேள்விதான். சொன்னவர்கள் பெயரை எல்லாம் அவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி சொல்ல முடியாது என்று சொல்லி இருக்கிறார். பின் எதற்கு முன்னுரையில் தான் மாபெரும் ஆராய்ச்சி செய்ததாகவும் ஆராய்ச்சி முடிவில் இதை கண்டுபிடித்ததாகவும் சொல்லி இருக்கிறார்? எல்லாம் பணம் தான் போல. ஆராய்ச்சி என்று சொன்னால் தானே அறக்கட்டளையின் பண உதவி கிட்டியிருக்கும்.

இதை ஒரு ஆராய்ச்சி முடிவு என்பதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக பாவம் ஒரு சில தவறுகள் செய்து விட்டார். எந்த ஊர், எந்த இடம், எப்போது, யார், எந்த சாதி என்பதெல்லாம் சொன்னால் தான் இது உண்மை என்பது போல் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

கதையின் நாயகனை (காளி), அறிமுகப்படுத்தும்போதே, அவன் வெள்ளாளன் சாதியை சேர்ந்தவன் என்று சொல்லி விடுகிறார். அவனும் அவன் மனைவியும் (பொன்னாயி) திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த பன்னிரண்டு வருட தாம்பத்தியத்தை அவர் விவரிக்கும்போது அவர்கள் இருவரும் மிகவும் மனமொத்திய தம்பதியராய் காட்டுகிறார். காளிக்கு இரண்டாம் கல்யாணம் செய்து விடலாம் என்று அனைவரும் சொல்லும்போது, அவன் பொன்னா மேல் வைத்திருக்கும் காதலால், குழந்தையே இல்லாமல் போனாலும் பரவா இல்லை பொன்னாயியை விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறான். பொன்னாயியும் அந்த பேச்சை எடுக்கும்போதெல்லாம் கோபப்படுகிறாள். 180 பக்கங்கள் வரை இது தான் இருக்கிறது. இரு கதாபாத்திரங்களையும் கற்பனை செய்து பார்க்கும்போது அவர்களுக்கிடையேயான காதல் அழகாகத் தான் இருக்கிறது.

அதன் பின் தான் பெருமாள் முருகன் மலை ஏறுகிறார். திருச்செங்கோட்டு தேர் திருவிழாவில் இரவு ஒரு கூட்டுக் கலவி நடக்கும் என்கிறார். இதைப் பற்றி ஒரு சில பக்கங்களின் முன்னே, திருமணத்திற்கு முன், காளி ஒரு திருவிழா இரவின் போது அவன் நண்பனுடன் சென்று, பயந்து போய் இரவு முழுக்க ஒரு மாட்டு வண்டியின் கீழ் ஒளிந்து கொண்டு அத்தனை விஷயத்தையும் பார்த்து விட்டு மட்டும் வருவதாகவும், அடுத்த ஆண்டு திருவிழாவில் அவனும் கலந்துக் கொள்வதாகவும் எழுதி இருக்கிறார்.

பன்னிரண்டு வருடங்களாக குழந்தை இல்லாததால், பொன்னாயியை அந்த தேர் திருவிழா இரவு, அழைத்துக் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று, காளியின் தாயாரும், பொன்னாயியின் தாயாரும் முடிவெடுக்கிறார்கள். இதனை தன மகனிடம் சேர்ந்து கள் அருந்தும்போது காளியிடம் அவன் அம்மா சொல்கிறார். அதற்க்கு அவன் அதிர்ச்சியில் எதுவுமே பேசவில்லை. அடுத்த நாள் அவன் பொன்னாயியிடம் இதைப் பற்றி கேட்கும்போது, எடுத்த எடுப்பிலேயே உனக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று பொன்னாயி சொல்கிறாள். இவ்வளவு நேரமும் பொன்னாயி என்ற பாத்திரத்தின் மேல் இருந்த பிடிப்பு நமக்கும், காளிக்கும் உடைகிறது.

பொன்னாயியை, திருவிழாப் பார்க்க போகலாம் என்று அழைத்துக் கொண்டு போய் தனியே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அவளும் முகம் தெரியாத ஒருவனுடன் சேர்ந்து போகிறாள். உறவு இருந்ததா இல்லையா என்பதை ஆசிரியர் விளக்கவில்லை. ஆனால் அவனுடன் போகும்போது இவன்தான் என் சாமி என்று நினைப்பதாக ஆசிரியர் கூறும்போதே நமக்கு அவளின் இணக்கம் புரிந்து விடுகிறது. காளியை அவன் மச்சான் வெளியே அழைத்துக் கொண்டு போய் சாராயம் ஊற்றி தூங்க வைத்து விடுகிறான். திடீரென்று நாடு இரவில் எழுந்திருக்கும் காளி, தன மனைவி தேடி அவன் மாமனார் வீட்டிற்கு போக, அது பூட்டப்பட்டிருப்பதும், மாட்டு வண்டி இல்லாமலிருப்பதும் பார்த்து புரிந்துக் கொண்டு அவளை திட்டியவாறே மேலும் சாராயத்தை குடித்து விட்டு சாய்கிறான்.

இந்தக் நாவல் உண்மையில் ஒரு சில விஷயங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நன்றாகத் தான் உள்ளது. அந்த ஒரு சில.

1.  சாதி. சாதியை பற்றி சொல்லாவிட்டால் எப்படி அது பின் நவீனத்துவ நாவல் ஆக முடியும். கதை முழுக்க கவுண்டர்கள் தான்.
           “நீ அந்தக்காலத்து ஆளாட்டமே பேசறீடா. ஒரு பொம்பளை சாதிக்குள்ளே எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊர உட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடதான் இருக்கோனுங்கறம். அப்புறம் எப்படி? வீதியில சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச்சாதி தண்டுவப் பசங்கதான், அப்புறம் என்னால பொன்னாளாத் தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்கமுடியாது போ.” 
இந்த வசனம் காளி சொல்வது போல் எழுதி இருக்கிறார். இதில் சாதியை விட பெண்கள் தான் பொங்க வேண்டும். அவர் எழுதுவதாக கூறப்படும் 1930 காலங்களில் சாதி ஒரு முக்கியமான விஷயமாக இருந்ததது. ஆனால் தன சாதி அல்லது தான் புழங்கும் சாதி ஆண்களிடம் பெண்கள் எத்தனை பேரிடமும் போனாலும் தவறு இல்லை என்பது போல் சொல்லி உள்ளது யாராயிருந்தாலும் சற்று கோபம் வரத்தான் செய்யும். இந்த வாக்கியத்தை ஒருவர் முகப்புத்தகத்தில் சுட்டிக் காட்டி, அந்த திருச்செங்கோடு கவுண்டர்கள் தீண்டாச் சாதி ஆண்களுடன் தங்கள் வீட்டுப் பெண்கள் கூடுவதாக சொல்லியிருப்பதைத் தான் பெரிய அவமானமாக எடுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அவர்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற சாதி ஆண்களுடன் எத்தனை பேருடனும் போனால் இப்போதும் கவலைப் படுவதில்லை என்று அர்த்தமா. சாதியா? பெண்ணுரிமையா? என்று வந்தால் இவர்களும் இவர்கள் சாதியைத் தான் கொண்டாடுகிறார்கள். சாதி ஒழிப்பு என்பது, இப்போதெல்லாம் எதிர் சாதி ஒழிப்பு என்றே ஆகிவிட்டது.

2. மதம். - முன்னுரையிலேயே "மாதொருபாகன்" விட சிறந்த தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக இல்லை என்று கூறுகிறார். மாது + ஒரு + பாகன் என்பது அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும் பெயர். தனது இடது பாகத்தை தன மனைவிக்கு தந்து, பெண்ணும் ஆணும் சரி சமமே என்ற பெண்ணியத்தை அன்றே உரத்து சொன்ன கதை அது. இது இந்த கதைக்கு ஒரு வகையில் பொருத்தமே. காளி முன்பே தேர்த்திருவிழாவில் ஒரு அல்லது பல பெண்களுடன் இருந்திருக்கிறான். பெண்ணுக்கும் சரி பாதி உரிமை இருக்கிறது என்பதால் பொன்னாயியும் அதையே செய்கிறாள். அதனால் தான் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம். ஒரு சமுதாய கோட்பாட்டிற்கு புறம்பில்லாத காரியத்தை அவளும் செய்வதாக இருந்தால் இந்த தலைப்பு பொருத்தமே. ஆனால் இந்தக் கதைக் கருவிற்கு இந்த தலைப்பு சில மத நம்பிக்கை கொண்டோர்க்கு கோபம் ஏற்படுத்தலாம் தான்.

தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் தேர்த் திருவிழா என்று ஒன்று உண்டு. அந்த ஊரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் முன்னிரவே வந்துக் கூடுவார்கள். அந்த இரவு முழுக்க கூத்தும், பாட்டும் நடக்கும். இது ஒரு மத சம்பந்தப்பட்ட விஷயம். யாரோ ஒருவர் சொல்லியதை (ஒருவேளை அவர் அப்படி செய்திருக்கலாம்) வைத்து, திருவிழாவை கொச்சைப்படுத்த தேவை இல்லை.

3. பெண்ணுரிமை - இந்த நாவலை எதிர்க்க வேண்டியவர்கள், பெண்ணுரிமை பேசுபவர்கள் தான். திருமணத்திற்கு பின் ஆறு வருடங்களாக காளிக்கு இரண்டாம் திருமணம் செய்வது பற்றி பேசும்போதெல்லாம், அதை தீவிரமாக எதிர்த்தவன் காளி தான். அவனுக்கு பொன்னாயி செய்வது நம்பிக்கை துரோகம் தான். அவள், அவன் ஒப்புக்கொண்டால் மட்டுமே தான் அதை செய்வதாக சொல்கிறாள். ஆனால் அவன் ஒப்புக் கொள்ளாமலேயே, இவளே விரும்பி போகிறாள். இது அவள் செய்யும் நம்பிக்கை துரோகம் தானே. இந்தக் கதைப்படி பார்த்தால் பெண்கள் பாதுகாப்பான சந்தர்ப்பம் கிடைத்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனுபவிக்க ஆசைப்படுவார்கள் என்பது போல் அல்லவா உள்ளது? அவர்களுக்கு இடையேயான காதலில், குழந்தை இன்மை காரணமாக அவன் படும் அவமானங்களை நினைத்து அவள் இப்படி செய்கிறாள் என்று சொன்னால், பொன்னாயியின் மதிப்பு இன்னும் கூடி இருக்கும். அதுவும் அவன் அன்று இரவு, தன் உறவுக்கார குழந்தையை தத்து எடுப்பதைப் பற்றி பேசுகிறான்.

இதில் எனக்கு புரியாத விஷயம் என்பது, பெண்கள் எல்லோருமே மலட்டுத் தன்மை இல்லாதவர்களா? ஆண்கள் மட்டுமே ஆண்மை இல்லாதவர்களா? ஒரு மலட்டுத் தன்மை உள்ள பெண், மற்ற ஆண்களுடன் இணைந்தால் குழந்தை உருவாகி விடுமா? அப்படி உருவாகினால், அது நிச்சயம் சாமி கொடுத்த பிள்ளை ஆகி விடுமே?

சரி இப்போது உள்ள பிரட்சினைகளுக்கு வருவோம். முதலில் இதை ஒரு குறிப்பட்ட சாதி அமைப்புகள் தான் எதிர்த்தன. பின் அவர்களுடன் மற்ற சாதிக்காரர்களும் சேர்ந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது உள்ளே வந்த BJP, RSS கும்பல்களால் எல்லாமே தலைகீழாகப் போய் விட்டது. BJP எதிர்ப்பு மட்டுமே நமது பத்திரிகைகளால் முன்னிறுத்தப்பட்டது. BJP எதிர்ப்பு என்றவுடன் கம்யுனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். திராவிடத்தினர் நிலைமை பரிதாபம். புத்தகத்தை எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருகிறார்கள்.

திரு. சிவகுமாரன் என்பவர் முகநூல் பின்னூட்டத்தில் எழுதி உள்ளதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

Siva Kumar on January 2, 2015 at 7:42 am
திருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)
* மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.
* இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் சாமி கொடுத்த குழந்தைபோன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.
* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?
*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?
* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.
புனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது."

அதை விட அதே luckylookonline பக்கத்தில் ஒரு பெண் இட்டிருந்த இந்த பின்னூட்டம், என்னை மிகவும் பாதித்தது.
http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html



இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there), 

விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும். 
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை. 
திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா. 
இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம். 
என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க."
உண்மையில் யாராவது இவருக்கு பதில் சொல்லத் தயாரா? அந்த பையன் வேண்டாம் வேறொரு பையனைப் பார் என்றெல்லாம் அறிவுஜீவியாக யாரும் பதில் சொல்ல வேண்டாம்.

       ஆக ஒரு நல்ல நாவல், உண்மை சம்பவம் என்று நிரூபிக்க வேண்டி, சொதப்பி விட்டது.

இறுதியாக : காளியின் பாட்டி சொல்வது போல் ஒரு வசனம் உள்ளது.

"உங்கொம்மா ராத்திரி எல்லாம் ஓசிச்சி ஓசிச்சி இப்படி ஒன்ன அவளே உருவாக்கி இருப்பா. " 

இதையே தான் சார் நீங்களும் பண்ணியிருக்கீங்க.

பின் குறிப்பு : இந்த நாவல் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இரண்டு வெவ்வேறு முடிவுகளுடன் வரப் போகிறதாமே? சில விஷயங்களை மட்டும் நீக்கி விட்டுப் பார்த்தால், மிக நல்ல நாவல் இது.


No comments:

Post a Comment