Tuesday, January 20, 2015

கவர்னரின் ஹெலிகாப்டர் - புத்தக (அட்டை) விமர்சனம்.- I


சென்னை புத்தகக் கண்காட்சியின் உள்ளே நுழையும் முன்பே என் மகனிடம் சொல்லி விட்டேன். "எஸ்.கே.பி. கருணாவின் புத்தகம் கவர்னரின் ஹெலிகாப்டர் கண்ணில் பட்டால் சொல்லு. வாங்க வேண்டும்". உள்ளே நுழைந்து கிட்டத்தட்ட நூறு ஸ்டால்களைக் கடந்து, கிலோக்கணக்கில் புத்தகங்களை சுமந்துக்கொண்டு, பாதி ஸ்டால்களை சுற்றி வருவதற்குள் அவன் தளர்ந்து விட்டான். புத்தகங்களைப் பற்றியோ, புத்தகப் பதிப்பகங்களைப் பற்றியோ அவனுக்கு எதுவுமே தெரிய வில்லை என்பது மனதிற்கு வருத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பதிப்பக அரங்கினுள் நுழையும் போதும், அந்தப் பதிப்பகம், எந்த எந்த ஆசிரியர்களின் நூற்களை பெரும்பான்மையாக வெளியிடும்.என்பதையும், எந்த வகையான நூற்களை வெளியிடுவார்கள் என்பதையும் அவன் காது கொடுத்து கேட்க்காவிட்டாலும், என் நினைவாற்றலை புதிப்பித்துக் கொள்வதற்காக சொல்லிக் கொண்டே வந்தேன்.

"நீ ஏதோ ஒரு புத்தகம் கேட்டியே. அதை எந்த பதிப்பகம் வெளியிடும்"

"வம்சி புக்ஸ்"

"அது நம்ம வீட்டு பக்கத்திலேயே இருக்கே.அதை ஏன் இங்க வந்து வாங்கணும்"

"அங்கே இல்லை. அதான்".

அதற்குள் அனந்த விகடன் கொடுத்திருந்த மேப் பார்த்து வம்சி அரங்கைக் கண்டுபிடித்து, "அது எதிர்ப்பக்கத்தில் இருக்கிறது. வா போகலாம்" என்று வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

நமக்கெல்லாம், புத்தகக் கண்காட்சி என்பது ஒரு சொர்க்கம். ஒரு முறை வாடகை காரை எடுத்துக் கொண்டு போய், ஒரு நாளில் முழுக்க சுற்றிப் பார்க்க முடியாமல், தங்கினால் கார் வாடகை அதிகமாகுமே என்று குறை மனத்துடன் ஊர் திரும்பினேன். அடுத்த வருடத்தில் இருந்து பேருந்து பயணம் தான். இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு, நாள் முழுக்க பாட புத்தகம் என்னும் பேப்பர்களையே பார்த்துக் கொண்டிருப்பதாலோ என்னவோ, மற்ற புத்தகங்களும் வெறும் பேப்பர்களாகவே தெரிகின்றன.

வம்சி புத்தக அரங்கினில் வெளியே நின்றுப் பார்த்தேன். கவர்னரின் ஹெலிகாப்டர் பெயர் தாங்கிய புத்தகம் காணோம். இன்னும் வெளியாகவில்லையா? அல்லது விற்று தீர்ந்து விட்டதா? என்ற மனக்குழப்பத்துடன் உள்ளே சென்று பார்வையிட்டேன். என் பையனும் பார்த்துக் கொண்டே வந்தான். அதற்குள் அரங்கத்தில் இருந்த ஒருவர்(ன்) வந்து, 

"சார், என்ன புத்தகம் வேண்டும்?" 

"கவர்னரின் ஹெலிகாப்டர், எஸ்.கே.பி. கருணா எழுதியது"

"இருக்கு சார்" - அவனருகிலிருந்த அடுக்கில் பார்த்து விட்டு, சற்றுத் தள்ளியிருந்த அடுக்கிலிருந்து எடுத்துக் கொடுத்தான். 

அதன் அட்டை படத்தை பார்த்த பின் தான் இதை நாம் முன்பே பார்த்தோமே என்று, நான் கடைசியாக பார்த்துக் கொண்டிருந்த அலமாரியிலேயே, என் கண் எதிரிலேயே அது இருந்ததைப் பார்த்தேன். 

என் மகனிடம், " வயசாகிப் போயிடுச்சி போலிருக்கு. பக்கத்திலேயே இருக்கிறது, கண்ணுக்கு தெரியல" என்றேன்.

அவன் சிரித்துக் கொண்டே, "ஸ்டாலில் இருந்தவர் முதலில் பார்த்தாரே ஒரு அடுக்கு. அதில் இல்லை என்று தானே தள்ளி இருந்த அடுக்கிலிருந்து எடுத்துக் கொடுத்தார். நன்றாக பாருங்கள். அவர் முதலில் பார்த்த அடுக்கிலேயே அந்த புத்தகம் இருக்கிறது. அதுவே அவர் கண்ணுக்கு தெரியவில்லை. அவருக்கு என் வயது தான் ஆகிறது. உங்கள் பார்வையில் குறைப்பாடு இல்லை. ரேப்பர் டிசைன் அது மாதிரி.மங்கலாக இருக்கிறது. இருட்டில் வைத்து விட்டால் கண்டுப்பிடிப்பது கஷ்டம்." என்று தேற்றினான்.

பல நூறு புத்தகங்கள் இருக்கும் ஒரு அடுக்கில், நம் புத்தகத்தின் பக்கம் ஒரு வாசகனின் கண்ணை திரும்ப செய்வது அதி முக்கியம். வளர்ந்த, பிரபலமான எழுத்தாளர்களுக்கு கூட ஆங்கில புத்தகங்களில் ஆசிரியர்களில் பெயரை மிகப் பெரியதாக போடுகிறார்கள். அதுவும் முதல் புத்தகம் வெளியிடும்போது அந்த புத்தகத்தின் அட்டை கொஞ்சம் கண்ணை ஈர்க்கும்படி கவர்ச்சியாக (அதற்காக நான் நடிகைகளை போட சொல்லவில்லை), அதிக வண்ணமயமாக இருக்க வேண்டும். 

ஒரு புத்தகத்தின் மேல் இருக்கும் அட்டைதான் அது எந்த வயதினருக்கான, எந்த மனநிலைக்கான புத்தகம் என்பதை காட்டுகிறது. அதிக கிராபிக்ஸ் உடன் கலர் கலராய் இருக்கும் புத்தக அட்டையை பார்த்த உடன் நம் மனது ஒரு குழைந்தைக்கான் புத்தகம் என்ற நினைவைத் தான் கொடுக்கும். அதுப் போல நவீன ஓவியங்கள், பழுப்பு வெள்ளை ஓவியங்கள், ஒரு பின் நவீனத்துவ, கம்யுனிச, தலித் இலக்கிய வகையை சார்ந்தது என்ற உணர்வைக் கொடுக்கும். ஒருவரின் புகைப்படம் மட்டுமே நிறைந்திருந்தால், அவரின் வாழ்க்கை வரலாறு போல என்றே எண்ணத் தோன்றும்.

ஒரு ஆசிரியரின் முதல் புத்தகத்தின் அட்டை, ஆசிரியரின் பெயர், புத்தகத்தின் பெயர் இவை எல்லாவற்றையும் விட அந்த அட்டைப படமே கவர்ந்து இழுப்பதாக இருக்க வேண்டும். இதில் உள்ள எல்லாக் கதைகளும் (கட்டுரைகளும்) முன்பே இணையத்தில் வாசித்தது தான். ஆனாலும், புத்தகமாக படிப்பது வேறொரு சுகானுபவமாக இருப்பது உண்மை தான். அதுவும் கருணா எழுத்து நடையில் சுவாரசியம் குன்றாமல் ஒரு கதையை எடுத்துக்கொண்டு செல்வதில் மிகவும் தேறி விட்டார். இந்த புத்தகம் இணையத்தை தாண்டி, வெளியில் உள்ள, இது வரை கருணாவின் எழுத்துக்களை அறியாத, வாசகர்களுக்காக வெளியிடப்படுவது. விளம்பரங்களோ, வியாபார தந்திரங்களோ எதுவுமே இல்லாமல், மிகவும் அமைதியாக, (இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த புத்தகத்தை இளையராஜா வெளியிட்டது தெரியும்) வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்த இருக்கும் ஒரே வழி புத்தக அட்டை தான். 

நாங்கள் புத்தகக் கண்காட்சி முழுக்க சுற்றியும், வம்சி அரங்கைத் தவிர வேறெங்கும் இந்த புத்தகம் கண்ணில் படவில்லை. நிறைய அரங்குகளில் இந்த புத்தகத்தை வைத்திருக்கலாம். ஒரு சிறிய புத்தக அறிமுக விழாவை கண்காட்சிக்குள் செய்திருக்கலாம். அது புத்தகத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிய வைத்திருக்கும். குறைந்த பட்சம், புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறுக் குறிப்பாவது அங்கங்கே தொங்க விட்டிருக்கலாம்.

சரி. புத்தக விமரிசனம் எங்கே என்றுக் கேட்கிறீர்களா? கொஞ்சம் காத்திருங்கள். 





No comments:

Post a Comment